1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு: தஞ்சை மாவட்டத்தில் சம்பா நடவுப்பணிகள் தொடங்கின

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பா நடவுப்பணிகள் தொடங்கின.

Update: 2018-09-05 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகு படிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

குறிப்பட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெறும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.

இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இன்னும் கடைமடை பகுதிக்குசெல்லவில்லை.

இதனால் அந்த பகுதியில் விவசாய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மற்ற பகுதிகளில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 30 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதையடுத்து சம்பா நடவுப்பணிகள் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி உள்ளன. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு பகுதிகளில் தற்போது சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. பம்புசெட் மோட்டார் மூலம் நாற்றங்கால் தயாரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போது தீவிரமாக நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற பகுதிகளில் இந்த மாத இறுதியில் நடவுப்பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்