366 நாட்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது - மாநகராட்சி தகவல்

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 366 நாட்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Update: 2018-09-05 22:30 GMT
மும்பை,

மும்பை பெருநகரத்துக்கு தானே மற்றும் நாசிக் மாவட்டங்களில் உள்ள விகார், துல்சி, தான்சா, பட்சா, மோடக்சாகர், மத்திய வைத்தர்ணா, மேல் வைத்தர்ணா ஆகிய 7 ஏரிகளில் இருந்து ராட்சத குடிநீர் குழாய் மூலம் கொண்டு வந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏரிகளில் இருந்து நாள்தோறும் மாநகராட்சி சார்பில் 3 ஆயிரத்து 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பெய்து வரும் பருவமழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார், துல்சி, தான்சா, மோடக்சாகர் ஆகிய 4 ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பின.

மும்பையின் மொத்த குடிநீர் தேவையில் 50 சதவீதம் தண்ணீரை வழங்கும் பட்சா ஏரியும் அண்மையில் நிரம்பியது. இந்த நிலையில், மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது வரை 96.30 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த 366 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்றும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தற்போது, மேற்படி 7 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 13 லட்சத்து 93 ஆயிரத்து 826 மில்லியன் லிட்டராக உள்ளது. எனவே அடுத்த மழைக்காலம் வரையிலும் வினியோகம் செய்ய போதிய தண்ணீர் இருப்பு இருப்பதால் மும்பைக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்