பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு - ஆஸ்பத்திரியில் அனுமதி

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-09-05 23:30 GMT
மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவருக்கு 95 வயது ஆகிறது. வயது முதிர்வினால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். நேற்று மதியம் திடீரென அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து உடனடியாக அவர் மும்பை பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவருக்கு நெஞ்சில் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதற்காக டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி அவரது மனைவி சாய்ரா பானு கூறுகையில், ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திலீப்குமாரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து உள்ளோம். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சில நாட்கள் தங்கியிருப்பார். அவர் விரைவில் வீடு திரும்ப அனைவரும் வாழ்த்த வேண்டும்’ என்றார்.

அந்த தனியார் மருத்துவமனை துணை தலைவர் அஜய்குமார் பாண்டே கூறுகையில், ‘நடிகர் திலீப்குமாரின் உடல் நிலையில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர் நலமுடன் உள்ளார். அவர் எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருப்பார் என்பதை தற்போது தெரிவிக்க இயலாது’ என்றார்.

மேலும் செய்திகள்