சிறுமியுடன் பழகியதால் ஆத்திரம்: வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

சிறுமியுடன் பழகிய வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-05 22:45 GMT
பெருமாநல்லூர்,

வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). இவர் மொரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இந்த கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் அந்த சிறுமியுடன் பழகினார். இது அந்த பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர் சக்திவேல் (22) என்பவருக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து அந்த சிறுமியிடம் பழகுவதை நிறுத்திக்கொள்ளுமாறு, மணிகண்டனை சக்திவேல் எச்சரித்தார். ஆனாலும் அவர், அந்த சிறுமியுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட, சக்திவேல் திட்டம் தீட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வாரணாசிபாளையம் பிரிவு அருகே சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம், சக்திவேல், நைசாக பேசி, அவரை அந்த பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மதுஅருந்தியுள்ளனர்.

அப்போது சக்திவேல் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மணிகண்டனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பூர்அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சக்திவேல் மீது பெருமாநல்லூர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்