கயத்தாறில் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகை–பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கயத்தாறில் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-06 22:00 GMT

கயத்தாறு,

கயத்தாறில் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணுவ வீரர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு 2–வது வார்டு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி (வயது 35). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வேல்தாய் (29). இவர்களுக்கு மனிஷா (8) என்ற மகளும், அர்ஜூன் (2) என்ற மகனும் உள்ளனர். மனிஷா, அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 3–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

வேல்தாயின் பெற்றோரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த 4–ந்தேதி இரவில் வேல்தாய் தங்களது வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டில் சென்று தூங்கினார்.

கதவை உடைத்து...

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க மரக்கதவை கடப்பாரை கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1½லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலையில் வேல்தாய் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள், பணம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்