நெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் ஒப்படைத்த வியாபாரி

நெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் வியாபாரி ஒப்படைத்தார்.

Update: 2018-09-06 22:30 GMT
நெல்லை, 

நெல்லையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கலெக்டரிடம் வியாபாரி ஒப்படைத்தார்.

சாலையில் கிடந்த பணம் 

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஆயிரம். இவர் போலீஸ் ஆயுதப்படை மைதானம் எதிரே சாலையோரத்தில் கரும்புச்சாறு, இளநீர் மற்றும் கூழ் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 4–ந் தேதி மாலையில் ஆயிரம் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கைப்பிடியில் தொங்க விடப்பட்டிருந்த ஜவுளிக்கடை பை ஒன்று கீழே விழுந்தது. இதை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கவனிக்கவில்லை.

இதைக்கண்ட ஆயிரம் அந்த பையை எடுத்து திறந்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், செல்போன் சார்ஜர், திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. மொத்தம் ரூ.2¼ லட்சம் இருந்தது. யாராவது வந்து கேட்டால் அந்த பணத்தை கொடுத்து விடலாம் என்று தனது கடையில் வைத்து இருந்தார். ஆனால் யாரும் பணம் பற்றி கேட்க வரவில்லை.

கலெக்டரிடம் ஒப்படைப்பு 


இந்த நிலையில் நேற்று காலையில் ஆயிரம், அவருடைய மனைவி வள்ளி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு சென்றனர். அங்கு கலெக்டர் ஷில்பாவிடம் பணத்தை ஒப்படைத்து நடந்த விவரங்களையும் கூறினர். கலெக்டர் ஷில்பா ஆயிரம்–வள்ளி தம்பதியை பாராட்டினார்.

இதையடுத்து கலெக்டர் ஷில்பா, திருமண அழைப்பிதழ் மற்றும் பணம் ஆகியவை குறித்து விசாரித்து உரியவரை தேடி கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கியதில் அந்த பணம் நெல்லையை அடுத்த பிராஞ்சேரி சித்தன்பச்சேரியை சேர்ந்த பெருமாள் என்பவர், தனது குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக சேர்த்து வைத்த பணம் என்பது தெரியவந்தது. போலீசார் பெருமாளை உடனடியாக அழைத்து வந்தனர். அவரிடம் பணம், திருமண அழைப்பிதழ், சார்ஜர் ஆகியவற்றை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

பாராட்டு 


வியாபாரி ஆயிரம் தனது மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ கல்வி படிக்க வைத்துள்ளார். இதற்காக தவணை முறையில் சிறிது, சிறிதாக பணம் செலுத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை நேர்மையாக கலெக்டரிடம் ஒப்படைத்த ஆயிரத்தை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பாராட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக ஆயிரம் கூறுகையில், ‘‘ எனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய இந்த நெருக்கடியான நேரத்தில் கடவுள் எனக்கு பணத்தை கொடுத்து சோதித்தார். நான் அதை எடுக்கவா, சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்கவா? என்று குழப்பத்தில் இருந்தேன். என்னுடைய மனைவி உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள், கண்டிப்பாக நமக்கு பின்னால் பணம் கிடைக்கும் என்றார். இதையடுத்து எனக்கு பழக்கமான சில அதிகாரிகள் உதவியுடன் கலெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தேன். இதற்கு பரிசாக ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள். அதை மனநிறைவோடு பெற்றுக் கொண்டேன்’’ என்றார்.

மேலும் செய்திகள்