காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-09-06 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் 2-ம் கட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், கலந்தாய்வில் பொதுமாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்வது அவசியம், தரம் உயர்த்தப்பட்ட 95 மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல 9 முதுநிலை பணியிடங்கள் வழங்கி கிராமப்புற மாணவர்களின் நலன் காத்திட வேண்டும், நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு ஆசிரியர்களை பயிற்சியளிக்க நிர்ப்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கல்வி மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஜாண் இக்னேசியஸ், நாகராஜன், பிரபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஆசிரியைகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்