கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 8 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-09-06 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 3 பேர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள், கும்மிடிப்பூண்டி மணியகாரத்தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 28), நாகராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (38), ஆரம்பாக்கம் அடுத்த நொச்சிக்குப்பத்தை சேர்ந்த சுதாகர் (35) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் இருந்து தலா 28 மதுபாட்டில்கள் என மொத்தம் 84 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாப்புத்தூர் கிராமத்தில் தனது வீட்டில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த ஆனந்தன் (45) என்வரிடம் இருந்து 16 மதுபாட்டில்களையும், கோங்கல்மேடு முந்திரி தோப்பில் மதுபாட்டில்களை விற்பனை செய்த ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த காட்டன் (65) என்பவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அப்பாவரம் கிராமத்தை சேர்ந்த ஆரியப்பன் (31) என்பவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும், கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை தெருவில் மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மோகன் (46) என்பவரிடம் இருந்து 27 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுவாயலில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் மதுபாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் (45) என்பவரிடம் இருந்து 27 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது விற்றதாக மேற்கண்ட 8 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்