அதிகாரிகள் வீடுகளில் சோதனை: சி.பி.ஐ.யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் சி.பி.ஐ.யின் அடுத்த கட்ட நட வடிக்கை என்ன? என்ற கேள்விக்கு திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் கூறினார்.

Update: 2018-09-06 23:15 GMT
செம்பட்டு,

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தலைவர் என்ற முறையில் அவர் எதையாவது கூறி வருகிறார். அவர் கூறி வருவதில் ஒன்று கூட உண்மை கிடையாது. பாசிச கட்சி என்றால் அது பா.ஜ.க. அல்ல. அதற்கு பொருத்தமான கட்சி தி.மு.க. தான். விமானத்தில் நடந்த பிரச்சினையில் சோபியாவை கைது செய்தது தவறு என்று கூறுகிறார்கள். விமானத்தில் பயணம் செய்யும் போது யாராக இருந்தாலும் சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

எங்களை விமர்சனம் செய்ய கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் தொந்தரவு செய்யாமல் விமர்சனம் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்று தெளிவாக தெரிகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் எந்த கட்சியையும் ஆட்டி வைப்பதற்கோ, இயக்குவதற்கோ பா.ஜ.க. தயாராக இல்லை. எங்களை நாங்களே வளர்த்து கொண்டு இருக்கிறோம்.

சென்னையில் மு.க.அழகிரி தலைமையில் தி.மு.க.வினர் பேரணி நடத்தி உள்ளார்கள். முதலில் இது பற்றி தி.மு.க.வினர் கவலைப்பட வேண்டும். அவர் நடத்திய பேரணி தமிழகத்தை அவரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் நடந்த சி.பி.ஐ. சோதனையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறும் போது, “ தமிழகத்தில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையினர் உச்சக்கட்டநிலையில் தான் இதுபோன்ற சோதனைகளை நடத்துவார்கள். அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்ட பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்