கணவன்-மனைவியை தாக்கி 20 பவுன் நகைகள் கொள்ளை முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

கீரனூரில் கணவன்-மனைவியை தாக்கி, 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 3 முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-06 23:00 GMT
கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பரந்தாமன் நகர் பகுதியை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 54). இவரது மனைவி சம்சத்பேகம்(50). இவர்களது மகன் பஷீர்அகமது (30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பஷீர்அகமதுவின் மனைவி ரீனோத் பேகம்(24) தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் காதர்மைதீன், சம்சத்பேகம் ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இதனை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் உள்ள இரும்பு கேட்டையும், மரக்கதவையும் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர்.வீட்டின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்த காதர்மைதீன், சம்சத்பேகம் ஆகியோர் சுதாரிப்பதற்குள், அவர்களை மர்ம நபர்கள் தாக்கினார்கள். இதில் காயமடைந்த சம்சத்பேகம் மயங்கி விழுந்தார்.

பின்னர் மர்மநபர்கள் பீரோ சாவி எங்கே உள்ளது எனக்கேட்டு காதர்மைதீனை மீண்டும் தாக்கினார்கள். காதர்மைதீன் பீரோ சாவி இருக்கும் இடத்தை கூறாததால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 8 மோதிரங்கள், கைச்சங்கிலிகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் சம்சத்பேகம் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் எடுத்து கொண்டனர்.

பின்னர் மர்ம நபர்கள் காதர்மைதீனின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, மோட்டார் சைக்கிள் சாவியை வாங்கி வெளியே நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினர். சிறிது தூரம் சென்றபின்பு மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு, தப்பிச்சென்று விட்டனர். கொள்ளைபோன நகைகள் 20 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காதர்மைதீன் தனது மனைவியை சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கீரனூர் போலீசில் காதர்மைதீன் புகார் செய்தார். அதன்பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் ஆகாஷ் வரவழைக்கப்பட்டது. அது புதுக்கோட்டை சாலையில் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து காதர்மைதீன் கூறுகையில், எனது வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 3 மர்மநபர்கள் ஈடுபட்டனர். அவர்கள் டவுசர் மட்டுமே அணிந்திருந்தனர். 3 பேரும் முகத்தை துணியால் கட்டி மறைத்து இருந்தனர். அவர்கள் என்னை தாக்கியபோது, ஒருவரது முகத்தில் துணி கிழிந்து விட்டது. முதலில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, டார்ச்லைட் வெளிச்சத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். என்னிடம், 10 பேரின் புகைப்படங்களை காட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் 2 பேரை அடையாளம் காட்டி உள்ளேன் என்றார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன்- மனைவியை தாக்கி விட்டு 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்யைடித்து விட்டு தப்பிச்சென்ற 3 டவுசர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்