சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்ட வாலிபரை கடலூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கடலூர்,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரது மகன் நேதாஜி(வயது21). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் யாரோ ஒருவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டார்.
ஆனால் அவரது அழைப்பு தவறுதலாக கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சென்றது. அவரிடம் சிறுமி பேசினார். எதிர் முனையில் சிறுமி பேசியதால் சந்தோஷமடைந்த நேதாஜி அடிக்கடி சிறுமியுடன் பேசி அவரை வசப்படுத்தினார்.
சம்பவத்தன்று சிறுமியை பார்ப்பதற்காக கடலூர் வந்த நேதாஜி, சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அதனை தனது செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்தார். அந்த வீடியோவை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தந்தை கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் கடலூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேதாஜியை நேற்று கைது செய்தனர்.