திருச்செங்கோடு அருகே மனைவி அடித்துக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்செங்கோடு அருகே மனைவி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-09-06 23:00 GMT
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அப்தூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுருட்டையன் என்கிற பிரபாகரன் (வயது 33). இவருடைய மனைவி புனிதா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பிரித்திவிராஜ் (7) என்கிற மகன் உள்ளான். பிரபல ரவுடியான சுருட்டையன் மீது நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுருட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து புனிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுருட்டையன் புனிதாவை சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுருட்டையன் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு புனிதா பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி சுருட்டையனை வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியை, கணவனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்