பொள்ளாச்சியில் போலி பீடி விற்பனை செய்த 5 பேர் கைது

பொள்ளாச்சியில் போலி பீடி விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-06 22:00 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் பிரபல பீடி நிறுவனத்தின் டீலராக மார்க்கெட் ரோட்டை சேர்ந்த அப்துல்சுக்கூர் (வயது 42) என்பவர் உள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் பெயரில் போலி பீடி தயாரித்து விற்பனை செய்வதாக பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் இருந்த 19 பண்டல் போலி பீடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் மந்திரமூர்த்தியை (52) கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனி ரமேஷ் (25), சத்திரம் வீதி சிவக்குமார் (42), சிவா (24), அன்னபூரணி லே-அவுட்டை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (76) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் குடோனில் பதுக்கி வைத்த 180 பண்டல் பீடி பறிமுதல் செய்யப் பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பீடிக்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

கைதான 5 பேரையும் போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட்டு ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்