மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்

சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு கேடயம்-பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

Update: 2018-09-06 23:00 GMT
சேலம்,

சேலம் அம்மாபேட்டை ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் 2017-18-ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 91.1 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 19-வது இடத்தை பெற்றுள்ளது. இதேபோன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 94.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் 95.24 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்தை பெற்றுள்ளது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த 1,518 பேர், அதேபோன்று 12-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த 683 பேர் என மொத்தம் 2,201 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதேபோன்று 65 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 7 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி, கல்வி அலுவலர்கள் தங்கவேல் (சேலம்), ரமேஷ் (ஆத்தூர்) விஜயா (எடப்பாடி), ராமசாமி (சங்ககிரி), மதன்குமார் (சேலம் ஊரகம்) உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்