தங்கையின் காதலனை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

அம்பர்நாத்தில் தங்கை யின் காதலனை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-06 23:14 GMT
அம்பர்நாத்,

தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் பப்பு பக்டி (வயது25). இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஒரு கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி ராகுல் நாம்தேவ் (23) என்ற ஆட்டோ டிரைவர் சிவாஜி நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், போலீசுக்கு தகவல் கொடுத்த ஆட்டோ டிரைவர் ராகுல் நாம்தேவ் தான் அவரை அடித்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

ராகுல் நாம்தேவின் 21 வயது தங்கையும், பப்பு பக்டியும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்து ராகுல் நாம்தேவ் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று இதுதொடர்பாக பேசுவதாக கூறி அவர் பப்பு பக்டியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்தார். பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதை ஆட்டோவில் வரும்போது தற்செயலாக பார்த்தாக போலீசுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் ராகுல் நாம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்