புனேயில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புனேயில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-06 23:20 GMT
புனே,

புனே சந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவின் வாக்மரே (வயது25). இவரது மனைவி ஆர்த்தி(20). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் தான் ஆகிறது. இந்தநிலையில், பிரவின் வாக்மரே தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படு கிறது. இதற்காக அவர் ஆர்த்தியிடம் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி தரும்படி கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு ஆர்த்தி மறுத்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த பிரவின் வாக்மரே மனைவியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு அவரது தந்தை லட்சுமண் வாக்மரே (48), தாய் லலிதா (45), தம்பி சச்சின் வாக்மரே (21) ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த புதுப்பெண் ஆர்த்தி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சந்தன்நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவின் வாக்மரே மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்த்தியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது சகோதரர் ஆகாஷ் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின் வாக்மரே மற்றும் அவரது தாய், தந்தை, தம்பி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 4 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்