அழகு நிலையத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்களுக்கு பாலியல் தொல்லை, 4 பேர் கைது

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அழகு நிலையத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-07 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை கன்னியக்கோவில் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 35). லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஆண் மற்றும் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சிவராஜ் தனது அழகுநிலையத்தில் மசாஜ் செய்வது இல்லை என தெரிவித்துள்ளார்.

உடனே மறுமுனையில் பேசிய நபர் தனக்கு பேசியல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவராஜ் தற்போது பெண்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும் நாளை(நேற்று) காலை வந்தால் ஆண்களுக்கு பேசியல் செய்யலாம் என்றும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் 4 பேர் அழகுநிலையத்தின் உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது சிவராஜ் அங்கு இல்லை. வேலை செய்யும் 2 பெண்களும், ஒரு வாடிக்கையாளரும் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. அவர்களிடம் தங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என 4 பேரும் கூறியுள்ளனர். அந்த பெண்கள் தற்போது ஆண் பணியாளர்கள் இல்லை. எனவே நாளை(நேற்று) காலை வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள் 4 பேரும் நீங்கள் தான் எங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவர்களின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் கூச்சலிட்டனர். உடனே அவர்கள் 4 பேரும் சேர்ந்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி அழகு நிலையத்தை சூறையாடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து அங்கு பணியில் இருந்த பெண்கள் அழகுநிலைய உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் இது குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிவராஜ் ஏற்கனவே தனது அழகுநிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை நவீன தொழில்நுட்ப உதவியின் மூலம் தனது செல்போனுடன் இணைத்து இருந்தார்.

அதன் மூலம் அழகுநிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகள் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அழகுநிலையத்தை சேதப்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது லாஸ்பேட்டையை சேர்ந்த கலையரசன் (வயது 34), பாலமுருகன்(29) சபரிநாதன்(28) அகிலன்(25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் கலையரசன் மீது கொலைமுயற்சி, வெடிகுண்டு, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகள்