அம்மாபேட்டை அருகே வாய்க்காலில் மிதக்கும் காட்டுப்பன்றி உடல்கள், சுகாதாரம் பாதிப்பதாக பொதுமக்கள் புகார்

அம்மாபேட்டை அருகே வாய்க்காலில் காட்டுப்பன்றியின் உடல்கள் மிதப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளார்கள்.

Update: 2018-09-07 22:00 GMT

அம்மாபேட்டை,

சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரகம் பாலமலை காப்புக்காட்டில் உள்ள செக்கானூர், நவப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றி, முயல், மான் போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.

பாலமலை காப்புக்காடு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர் வரை இருந்தாலும் மலைப்பகுதி அனைத்தும் சேலம் மாவட்டத்தையே சேருகிறது. இந்த மலைப்பகுதி மேட்டூரிலிருந்து வலது கரை வாய்க்காலை ஒட்டியுள்ளது. வாய்க்காலில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் அடிக்கடி காட்டுப்பன்றிகளின் உடல்கள் மிதந்து வருவதாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நெரிஞ்சிப்பேட்டை கோவில் கரடு, ஊமாரெட்டியூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘மர்ம நபர்கள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுகிறார்கள். அப்போது வனத்துறையினர் வந்துவிட்டால் காட்டுப்பன்றியின் உடல்களை வலது கரை வாய்க்காலில் போட்டுவிடுகிறார்கள். இதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் போட்டிருக்கும் மின்வேலிகளில் சிக்கியும் காட்டுப்பன்றிகள் இறந்துவிடுகின்றன. அவைகளும் வாய்க்காலில் விடப்படுகின்றன. இதனால் தண்ணீர் செல்லும் அனைத்து இடங்களிலும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே மேட்டூர் வனச்சரக அதிகாரிகள் காட்டுப்பன்றிகளின் உடல்களை வலது கரை வாய்க்காலில் விடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்றார்கள்.

மேலும் செய்திகள்