இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அஞ்சலி செலுத்த செல்வோர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் சிவகங்கை மாவட்ட மக்கள் விதிமுறைகளை கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 22:00 GMT

சிவகங்கை,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:–

இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து செல்கின்ற பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள், வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர்களுடன் கலந்தாலோசித்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் திட்டமிட்டபடி சென்று வரவேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, போக்குவரத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அந்தந்த பகுதிக்கு உரிய பஸ்கள் காலை 10 மணிக்குள் சென்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நினைவிடத்திற்கு செல்லக்கூடிய பொதுமக்கள் திட்டமிட்டபடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பஸ்களில் சென்று, மீண்டும் அதே பஸ்சில் சரியான நேரத்தில் வருகின்ற வகையில் நேரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டை போலவே ஒலிபெருக்கி மற்றும் பிளக்ஸ் பேனர்களுக்கு அனுமதி கிடையாது. அதற்கேற்ப நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு எங்கெங்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, இந்த ஆண்டு அவ்வாறு நடக்காத வண்ணம் முழு அளவு காவல் துறையின் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்