விநாயகர் சதுர்த்தி விழாவை யாருக்கும் இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும்

விநாயகர் சதுர்த்தி விழாவை யாருக்கும் இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-09-07 22:45 GMT
திருவள்ளூர்,

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது விநாயகர் சிலையை அமைக்க அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்.டி.ஓ.விடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலை அமைக்கப்படும் இடம் தனியாருக்கு சொந்தமானது என்றால் அந்த இடத்தின் உரிமையாளரிடமும் , பொது இடம் என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டும். மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின் வாரியத்தின் அனுமதியையும் கண்டிப்பாக பெறவேண்டும். பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு இல்லாத இடங்களாக தேர்வு செய்து விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். 10 அடி உயரத்திற்கு மிகாமல் களிமண்ணாமல் ஆன சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.

நீரால் கரையக்கூடிய இயற்கை வண்ண பூச்சுகளை பயன்படுத்திய சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் போன்ற பொருட்களை சிலைகளின் அருகில் வைக்கக்கூடாது. போலீஸ்நிலையத்தில் முன்அனுமதி பெறாமல் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது.

சிலைகளுக்கு ரசாயன பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. ஒலிப்பெருக்கியை விழா நாள் அன்று ஓருநாள் தவிர மற்ற நாட்களில் பயன்படுத்தக்கூடாது. மின் கம்பிகள் செல்லும் பாதைகளின் கீழ் சிலை அமைக்கக் கூடாது. போலீசாரின் அனுமதியின்றி கண்டிப்பாக சிலை கரைப்பு ஊர்வலம் நடத்தக்கூடாது. ஊர்வலத்திற்கு அனுமதிக்கப்பட்ட பாதையை விடுத்து மாற்று பாதையில் செல்லக்கூடாது. மசூதி, தேவாலயம் போன்றவற்றை கடக்கும் போது இடையூறு இல்லாத வகையில் செல்லவேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை யாருக்கும் இடையூறு இல்லாமல் கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன், தில்லைநடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், கங்காதரன், சந்திரதாசன், ராஜா, சேகர், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்