இன்று அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்க காங்கிரசார் ஏற்பாடு

மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவையொட்டி இன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாடுகிறார்கள்.

Update: 2018-09-07 22:00 GMT
வில்லியனூர்,

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு இன்று 49-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் கோலாகலமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை 6 மணிக்கு பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கிறார். இதன்பின் கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தர் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார். இதனைதொடர்ந்து தன்னுடைய குலதெய்வமான தட்டாஞ்சாவடி வீரபத்திரர் சாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது. தொடர்ந்து வில்லியனூர் மணவெளியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று பெற்றோரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்குகிறார். இதன்பின் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ள பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை தனது இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். வில்லியனூர் தொகுதி முழுவதும் காங்கிரஸ் கமிட்டி, மக்கள் நற்பணி மன்றங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் அன்னதானம் வழங்குகிறார். பின்னர் மாநிலம் முழுவதும் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று அன்னதானம் வழங்குகிறார். இதுதவிர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆங்காங்கே அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் செய்திகள்