செந்துறை ஒன்றிய பொறியாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

நூறு நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேட்டில் செந்துறை ஒன்றிய பொறியாளர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அரியலூர் கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2018-09-07 21:30 GMT
செந்துறை, 


அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள 30 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக நூறுநாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொது மக்கள் பயன்படுத்தும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. பிரதமரின் உத்தரவுபடி தற்போது விவசாய பணிகளுக்கு நூறுநாள் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டு வருகின்றனர். ஆனால் இந்த பணிகளை அரசியல் பிரமுகர்கள் எடுத்து, அதிகாரிகள் துணையுடன் முறைகேடு செய்வதாக புகார் எழுந்து வருகிறது.

இதே போன்று அரியலூர் மாவட்டம் இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்க, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நூறுநாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் நூறுநாட்கள் வேலை திட்டத்தில் பணிபுரியும் 36 தொழிலாளர்களை கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை பணிகள் நடைபெற்று வருவதாக செந்துறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் கூறப்பட்டது.

கடந்த 4-ந் தேதி அன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அந்த பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிதளத்தில் யாரும் இல்லை. ஆனால் பணி நடைபெறுவதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பணி முறைகேட்டில் ஈடுபட்ட செந்துறை ஒன்றிய பொறியாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகம், செந்துறை ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்