கூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூர்,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாணவ– மாணவிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை கட்டாயப்படுத்துவதை கண்டித்து கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சரவணக்குமார், பொருளாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எபி பெனன்ட் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்வித்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கூடலூர் செயலாளர் நல்லக்குமார் நன்றி கூறினார்.