இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி திட்டம்: சென்னை கும்பலுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டிய சென்னை கும்பலுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-07 22:30 GMT

கோவை,

கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (வயது 29), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னை ஓட்டேரியை சேர்ந்த சலாவுதீன் (25) ஆகிய 4 பேரை கோவை போலீசார் ரெயில் நிலையத்தில் கடந்த 1–ந் தேதி போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களை அழைத்து செல்ல வந்த கோவை என்.எச்.ரோட்டை சேர்ந்த ஆசிக் (25) என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 5 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (உபா) உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கோவை உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல் மற்றும் குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் கோவை வெறைட்டிஹால் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ பைசலை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அன்வரை தேடி வந்த நிலையில் அவரும் நேற்று குனியமுத்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவையில் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த 4 பேர் மற்றும் அவர்களை அழைத்து செல்ல வந்த ஆசிக் ஆகியோர் தான் சதி திட்டம் தீட்டி உள்ளனர். அவர்களுக்கு உதவியாக ஆட்டோ பைசல் மற்றும் அன்வர் ஆகியோர் செயல்பட்டு உள்ளனர்.

முதலில் கைதான 5 பேருக்கும் உதவியாக பைசல், அன்வர் ஆகியோர் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அன்வர் வீடுகளில் உள்அலங்கார வேலை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பைசலுக்கு சொந்தமான ஆட்டோ மற்றும் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்வதற்காக சென்னையை சேர்ந்த 4 பேர் மற்றும் கோவையை சேர்ந்த ஆசிக் ஆகியோர் பேசிக் கொண்ட செல்போன் உரையாடல் பதிவுகள், வாட்ஸ் அப் பதிவுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்(உபா)கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்வதற்காக கத்தியை கூட அவர்கள் வாங்கவில்லை. ஆனால் கடுமையான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளதற்கு காரணம் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தனர். இதன்மூலம் பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட திட்டமிட்டதால் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்