விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை - மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை உறுதி என மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-07 23:00 GMT
வேலூர்,

விவசாய நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க சில விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின்வேலி அமைக்கின்றனர். இந்த மின்வேலிகளில் வனவிலங்குகள் மட்டுமின்றி சில நேரங்களில் மனிதர்களும் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதும், மின்சாரம் பாய்ச்சுவதும் கிரிமினல் குற்றமாகும். மின்வேலி அமைத்தால் இந்திய குற்றவியல் சட்டம் படியும், மின்சட்டம் படியும், தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படியும் குற்றம் செய்தவர்கள் 2 வருட ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அனுபவிக்க நேரிடும்.

ஆகவே மின்நுகர்வோர் மின்சாரத்தை தகாத முறையில் அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் மின்சார வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு, சட்டவிரோதமாக வேலிகளில் மின்சாரம் பாய்ச்சும் மின்நுகர்வோரே இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்