மின்திருட்டில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி பணி இடைநீக்கம்

மின்திருட்டில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2018-09-07 23:11 GMT
தானே,

தானே மாவட்டம் ஷில் பகுதியை சேர்ந்த மாநில மின்வாரிய அதிகாரி ஆனந்த் ரதோடு. இவர் கடந்த ஜூலை மாதம் ஷில் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 826 யூனிட் அளவிற்கு மின் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு அபராதமாக, அந்த வணிக வளாக உரிமையாளர் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது.

இந்தநிலையில் அதிகாரி ஆனந்த் ரதோடு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வணிகவளாகத்தில் நடந்த மின் திருட்டின் அளவை 4 ஆயிரத்து 376 யூனிட்டாக குறைத்தார். இதனால் வணிக வளாக உரிமையாளர் செலுத்த வேண்டிய அபராதம் ரூ.77 ஆயிரத்து 190 ஆக குறைந்தது.

இந்தநிலையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்த போது அதிகாரி ஆனந்த் ரதோடு வணிகவளாக உரிமையாளருக்கு சாதகமாக ரசீதில் திருத்தங்கள் செய்தது அம்பலமானது. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்