விமானங்களில் கடத்திய ரூ.24¼ லட்சம் தங்கம் பறிமுதல்

பெங்களூருவில் விமானங்களில் கடத்தப்பட்ட ரூ.24¼ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-07 23:34 GMT
பெங்களூரு,

குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வரும் ஒரு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தார்கள். ஆனால் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த விமானத்தினுள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்். அப்போது விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருக்கைக்கு அடியில் 404 கிராம் எடைகொண்ட தங்கம் இருந்தது. இலங்கையில் இருந்து வந்த பயணி தங்கத்தை கடத்தி வந்ததுடன், அதனை இருக்கைக்கு அடியில் பதுக்கிவைத்து சென்றதும் தெரியவந்தது.

இ்துபோல, பக்ரைனில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடமும் சுங்கத்துறை அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க நகைகளை கடத்தி வந்திருந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் குடகு மாவட்டத்தை சேர்ந்த அகமது லத்தீப்(வயது 50) என்று தெரிந்தது. அவரிடம் இருந்து 403 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்பு அகமது லத்தீப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.

ஒட்டு மொத்தமாக 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.24¼ லட்சம் மதிப்பிலான 807 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விமான நிலைய போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இருக்கைக்கு அடியில் தங்கத்தை பதுக்கியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்