விளம்பர இரும்பு கட்டமைப்புகளை அகற்றுவதில் அவசரம் காட்ட வேண்டாம்

விளம்பர இரும்பு கட்டமைப்புகளை அகற்றுவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-07 23:49 GMT
பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விளம்பர பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் விளம்பர பலகைகள் வைக்கப்படும் இரும்பு கட்டமைப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாநகராட்சியின் இந்த நோட்டீசுக்கு எதிராக சில தனியார் நிறுவனங்கள், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. அதில், “பெங்களூரு மாநகராட்சியின் அனுமதி பெற்று நாங்கள் விளம்பர பலகைகள் வைத்தோம். அதை மாநகராட்சி அகற்றிவிட்டது. தற்போது இரும்பு கட்டமைப்புகளையும் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டப்படி அனுமதி பெற்று நாங்கள் விளம்பர பலகைகளை வைத்தோம். அதை அகற்றியது சரியல்ல. இரும்பு கட்டமைப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளம்பர பலகைகள் வைக்கப்படும் இரும்பு கட்டமைப்புகளை அகற்றுவதில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அவசரம் காட்ட வேண்டாம்” என்று கூறினார். இந்த மனுவை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு அனுப்புமாறு பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்