பிரபல எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் மீது போலீசில் புகார்

தான் ஒரு நக்சலைட்டு என்று பகிரங்கமாக கூறிய பிரபல எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-08 00:03 GMT
பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த பிரபல எழுத்தாளராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் கிரீஸ் கர்னாட். இவர், பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த 5-ந் தேதி பெங்களூருவில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். அப்போது நான் ஒரு நகர நக்சலைட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் வைத்து கொண்டு பேரணியில் கிரீஸ் கர்னாட் கலந்துகொண்டார். மேலும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் அவர் கூறி இருந்தார்.

இந்த நிலையில், தன்னை நக்சலைட்டு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள கிரீஸ் கர்னாட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி விதானசவுதா போலீஸ் நிலையத்தில் ஐகோர்ட்டு வக்கீல் அம்ருதேஷ் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கிரீஸ் கர்னாட் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று விதான சவுதா போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்