பொம்மை துப்பாக்கிகளை வைத்து நிஜ துப்பாக்கிகளை திருடியவர்கள்!

பராகுவே நாட்டில் ஆயுதக்கிடங்கில் பொம்மை துப்பாக்கிகளை வைத்துவிட்டு நிஜ துப்பாக்கிகளை திருடிச் சென்றுள்ளனர், பலே கில்லாடித் திருடர்கள்.

Update: 2018-09-08 07:14 GMT
ஆயுதக்கிடங்கில் இருந்த துப்பாக்கிகள் கள்ளச்சந்தையில் 10 டாலர்கள் வரையிலான விலையில் விற்பனையான நிலையில்தான் அதிகாரிகள் உஷாராயினர். அவர்கள் அதுகுறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.

அவர்கள் ஆயுதக்கிடங்கில் வைத்திருந்த துப்பாக்கிகளை சோதித்தபோது, மொத்தம் 42 துப்பாக்கிகள் திருடு போயிருப்பதும், அவற்றுக்குப் பதிலாக பொம்மை துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த பொம்மை துப்பாக்கிகள் மரம் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருந்தன.

ஆயுதக் கிடங்கில் இருந்து திருடிச் செல்லப்பட்ட துப்பாக்கிகள் நன்கு செயல்படும் நிலையில் இருந்தன. அவை, அர்ஜென்டினா அல்லது பிரேசிலுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்டை நாடான பிரேசில், பல காலங்களாக அங்கு பறிமுதல் செய்யப்படுகின்ற சட்டவிரோத ஆயுதங்கள் பராகுவேயிலிருந்து கடத்தப்பட்டவை என புகார் தெரிவித்து வருகிறது.

போலி துப்பாக்கிகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பராகுவே போலீசார், ‘இது மிகவும் அவமானத்திற்குரிய திருட்டு’ எனத் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட ஆயுதங்களை காவல் காக்கும் பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இதுகுறித்து கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் செய்திகள்