தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை: பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம்

‘பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன்‘ என்று தனியார் நிறுவன ஊழியர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-09-08 21:00 GMT

தூத்துக்குடி,

‘பெயர் சொல்லி அழைத்ததால் குத்திக் கொன்றேன்‘ என்று தனியார் நிறுவன ஊழியர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர் கொலை

தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் முத்து இருளப்பன் என்ற அஜித்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அஜித்குமார் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

கடந்த 4–ந் தேதி இரவு அந்த பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு ராஜபாண்டிநகர் கெபி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் பாரதி (23), அவரின் நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு இந்த கொலையில் தொடர்புடைய பாரதியின் தந்தை சங்கர், நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி

இந்த நிலையில் நேற்று காலையில் பாரதி, மோகன் ஆகியோர் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான பாரதி போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், நானும் எனது நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோர் ராஜபாண்டிநகர் பகுதியில் சம்பவத்தன்று இரவு மது குடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த அஜித்குமார் என்னை பெயர் சொல்லி அழைத்தார். அதனால் நான் அவருடன் தகராறு செய்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து அஜித்குமாரை குத்தினேன். உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவனை நான் எனது தந்தை சங்கர், நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டிநகர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பி சென்று விட்டோம். சென்னைக்கு சென்ற நான் வீட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்காக வந்தேன். அப்போது போலீசார் கைது செய்து விட்டனர் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்