அதிகாரிகள் கட்டுப்பாடுகள் விதிப்பு எதிரொலி: தென்காசி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம் தொழிலாளர்கள் வேதனை

அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக தென்காசி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாகி உள்ளது.

Update: 2018-09-08 21:30 GMT
தென்காசி, 

அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக தென்காசி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாகி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா 

நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13–ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ரசாயன கலவையினால் செய்யப்படும் சிலைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்ணால் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் மண்பாண்ட தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் மண் பானை, குடம், அடுப்பு உள்பட பல்வேறு பொருட்களை செய்து வருகின்றனர். இவை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா சமயத்தில் இந்த தொழிலாளர்கள் மற்ற பொருட்களை தயார் செய்வதை நிறுத்திவிட்டு விநாயகர் சிலைகளை மட்டுமே தயார் செய்கிறார்கள்.

கட்டுப்பாடுகள் விதிப்பு 

இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வாங்கி செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். அதாவது, வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, மின்வாரிய துறை உள்பட பல்வேறு துறைகளின் அனுமதி பெற்ற பிறகு தான் விநாயகர் சிலைகளை வாங்கி தாங்கள் விரும்பும் இடங்களில் வைக்க வேண்டும். ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்காசி பகுதியில் கடந்த ஆண்டு சுமார் 300 வரை விற்பனையான சிலைகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஒரு சிலை கூட விற்பனை ஆகாமல் உள்ளது.

தொழிலாளர்கள் வேதனை 

இதுகுறித்து இலஞ்சியை சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது:–

நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் மட்டுமே செய்வதில் ஈடுபடுவோம். 1 அடி முதல் 6 அடி உயரம் வரை இந்த சிலைகளை களிமண் மற்றும் வண்டல் மண்ணை சேர்த்து செய்கிறோம். ஒரு சிலை ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகும். தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் கேரளாவிற்கும் இந்த சிலைகள் ஏற்றுமதியாகும். இந்த ஆண்டு அதிகாரிகளின் கட்டுப்பாடுகளால் விற்பனை மிகவும் மந்தமாகியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

எங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இந்த தொழிலை மேம்படுத்த கட்டுப்பாடுகளை தளர்த்தி எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்