மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீண்டும் அரசியல் பிரவேசம் - நடிகர் கார்த்திக் பேட்டி

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீண்டும் அரசியல் பிரவேசம் செய்துள்ளதாக பசும்பொன்னில் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

Update: 2018-09-08 22:45 GMT
கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு நடிகர் கார்த்திக் வருகை தந்தார். பின்பு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை நினைவாலய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:- பசும்பொன் ஒரு புண்ணிய தலம். இங்கு வந்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நான் அரசியலில் இருந்து சுமார் 2¼ வருடம் ஒதுங்கியிருந்தேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதனால் யாரையும் குறை சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. தற்போது தமிழகம் உள்ள நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. எனது அரசியல் வாழ்வில் மூன்று முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன். அவர்களிடம் பழகியும் உள்ளேன்.

அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த நான் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீண்டும் அரசியல் பிரவேசம் செய்யும் கட்டாய சூழ்நிலையில் உள்ளேன். நாடாளும் மக்கள் கட்சி தற்போது இல்லை. புதிய கட்சி, புதிய வடிவில் புதிய பொறுப்பாளர்களுடன் புதுப்பொலிவுடன் உருவாகிறது. மக்கள் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்படும் கட்சியின் பெயர் இன்னும் 3 நாட்களில் மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது.

இதில் சில அமைப்புகள் சேவை செய்யும் எண்ணத்தோடு கட்சியில் இணைகிறார்கள். கட்சிக்கு புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகளோடு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கட்சியின் கொள்கைக்கு தடையாக இருப்பவர்கள் கட்சியில் இருக்க மாட்டார்கள். 3 நாட்களில் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவுகளை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் முக்குலத்தோர் புலிப்படை பாண்டிதுரை உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்