உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்ட எதிர்ப்பு, கிராம மக்கள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டியை குறுக்கே நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-08 22:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காம்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி வலியுறுத்தினர். இதையடுத்து காம்பட்டு கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் பதிப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு செல்லும் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பதிப்பதற்காக லாரி மூலம் குழாய்கள் நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டன. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்குள்ள சாலையின் குறுக்கே மாட்டு வண்டியை நிறுத்தியும் கற்களை போட்டும் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவு முழுவதும் அந்த வழியாக வாகனங்கள் செல்லவில்லை.

இதுகுறித்த தகவல் அறிந்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜமன்னர் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், நாங்கள் இந்த வழியாக தான் மாட்டு வண்டி மற்றும் வாகனங்களில் விவசாய நிலத்துக்கு சென்று வருகிறோம். சாலை ஓரத்தில் வசிப்பவர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை குறுகலாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பள்ளம் தோண்டப்பட்டால் வாகனங்களில் செல்ல முடியாது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோரத்தில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்க வேண்டும் என்றனர். பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலையில் போடப்பட்டிருந்த கற்கள், நிறுத்தி வைத்திருந்த மாட்டு வண்டி ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்