டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் டெல்லியில் இருந்து எடியூரப்பா திடீரென்று பெங்களூருவுக்கு திரும்பி வந்துள்ளார்.

Update: 2018-09-08 23:00 GMT

பெங்களூரு,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், டெல்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நேற்று காலையில் அவர் திடீரென்று பெங்களூருவுக்கு திரும்பி வந்து விட்டார்.

செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா பெங்களூருவுக்கு வந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஆனால் எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் மடாதிபதியை சந்திக்க வந்ததாகவும், அவரை சந்தித்து விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், எடியூரப்பா டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பி வந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி குமாரசாமி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருப்பதாக கூறினார்.

இதுபற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ‘‘சில காரணங்களுக்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளேன். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்க பெங்களூருவுக்கு வந்திருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மையாகட்டும் என்றார்.

மேலும் செய்திகள்