திருமருகல் அருகே கொடி கம்பத்தில் உரசிய மின்கம்பி சீரமைக்கப்பட்டது

செய்தி எதிரொலியால் திருமருகல் அருகே கொடி கம்பத்தில் உரசிய மின்கம்பி சீரமைக்கப்பட்டது.

Update: 2018-09-08 23:42 GMT
திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் நடுக்கடையில் நாகை-நன்னிலம் சாலையில் ஆற்றங்கரை தெருவிற்கு செல்லும் பிரிவில் பல அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இதில் ஒரு கொடிக்கம்பத்தில் மின்கம்பி உரசியபடி சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். இரும்பு பைப்பினால் அமைக்கப்பட்டிருந்த அந்த கொடிகம்பத்தில் காற்று வீசும் சமயத்தில் மின்கம்பி கொடிகம்பத்தில் உரசி தீப்பொறி ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். அந்த மின்கம்பியிலிருந்து கொடி கம்பத்திற்கு மின்சாரம் பாய்ந்து எந்த நேரத்திலும் உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை இருந்ததால் அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் இந்த செய்தி கடந்த 5-ந்தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரமானது. இதனையடுத்து மின்வாரிய துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொடி கம்பத்தில் மின்கம்பி உரசி சென்றதை சீரமைத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்து சீரமைத்த மின்வாரிய துறையினருக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்