கருகும் பயிரை காப்பாற்ற குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து பயிர்களில் தெளிக்கும் அவலம்

திருமருகல் பகுதியில் கருகும் பயிரை காப்பாற்ற குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து பயிர்களில் தெளிக்கும் அவலத்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2018-09-09 00:30 GMT
திருமருகல்,

நாகை மாவட்டம் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தில் முடிகொண்டானாறு, திருமலைராஜனாறு, அரசலாறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணியாறு, ஆழியானாறு, பிராவடையானாறு ஆகியவை மூலம் பாசனம் பெற்று விவசாயிகள் 13ஆயிரம் எக்டேர் பரப்பில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 போகம் சாகுபடி செய்து வந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையிலிருந்து போதிய தண்ணீர் கிடைக்காததாலும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த ஜூலை 19-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்தும், 22-ந்தேதி கல்லணையில் இருந்தும் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடைமடை பகுதியான திருமருகலுக்கு சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர்் வரவில்லை.

இதனால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காலத்தில் வந்து சேர்ந்து விடும் என்று நம்பிய விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர். பல்வேறு இடங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு செய்து தண்ணீருக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தெளித்த விதைகள் முளைத்து இளம் பயிரானது. இந்த பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் தண்டாளம், கட்டுமாவடி, புறாக்கிராமம், சீயாத்தமங்கை, திருமருகல், பண்டாரவாடை, தென்பிடாகை, குருவாடி, அண்ணாமண்டபம், புதுக்கடை, திருப்புகலூர், ஆமப்பட்டம், வவ்வாலடி, திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, மேலப்பூதனூர், அரிவிழிமங்கலம், மருங்கூர், சேகல், கரையிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான எக்டேரில் தண்ணீர் இல்லாமல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது.

இந்தநிலையில் கருகும் பயிரை காப்பாற்ற தண்டாளம் கிராமத்தில் பெண் தொழிலாளர்கள் வாய்க்கால் பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து வயல்களுக்கு சென்று பயிர்களில் தண்ணீரை தெளித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்