தேசிய விருதுபெற்ற பள்ளிகளுக்கு அமைச்சர் பாராட்டு

தேசிய விருது பெற்ற பள்ளிகளுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2018-09-09 00:11 GMT
காரைக்கால்,

தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு சுவாச் வித்யாலயா புரஷ்கார் என்ற சுகாதாரத்துக்கான தேசிய விருதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்கு அகில இந்திய அளவில் தேர்வான 52பள்ளிகளில் காரைக்கால் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி, அகலங்கண்ணு அரசு தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

இதன்மூலம் இந்திய அளவில் காரைக்கால் மாவட்டம் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் விருது பெற்ற 2 பள்ளிகளுக்கும், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் கேசவன், முதன்மை கல்வி அதிகாரி அல்லி, வட்ட ஆய்வாளர் சவுந்தரராசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினர்.

இதுபற்றி அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் அகலங்கண்ணு, கோட்டுச்சேரி பேட் ஆகிய 2 பள்ளிகள் சுவாச் வித்யாலயா புரஷ்கார் விருது பெற்று இந்திய அளவில் 3-ம் இடத்தை பெற்று, புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இதில் கோட்டுச்சேரி பேட் பள்ளி இந்த விருதை 2-வது முறையாக பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதை பாராட்டும் வகையில், முதல்-அமைச்சர் இரு பள்ளிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்க உத்தரவிட்டு உள்ளார். நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சரும், கவர்னரும் தினமும் 20 மணி நேரம் உழைக்கின்றனர். அதேபோல், அனைவரும் உழைக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்