போலீஸ் அதிகாரியின் ‘பாலியல் கல்வி’

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. சிறுமிகளும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

Update: 2018-09-09 07:47 GMT
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. சிறுமிகளும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவர் களிடத்தில் ‘நல்ல தொடுதல்’, ‘கெட்ட தொடுதல்’ பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சமூக அமைப்புகள் களம் இறங்கி இருக்கின்றன. பள்ளிகள் அளவிலும் இதுபற்றிய விழிப்புணர்வு விதைக்கப்பட்டு வருகிறது. பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும் மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஐ.பி.எஸ். அதிகாரியான அவரது பெயர் சரோஜ் குமாரி. குஜராத் மாநிலம் வதோதராவில் துணை போலீஸ் கமிஷனராக பணிபுரிகிறார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக தனி போலீஸ் படையை உருவாக்கி இருக்கிறார். அதில் 12 பெண் போலீசார் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வை குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துரைப்பது பற்றி பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. போலீஸ் சீருடையில் அல்லாமல் நீலநிற டீ சர்ட் அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவி களிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கிறார்கள். மாணவிகளிடம் இருவிதமான தொடுதலுக்கும் உரிய வித்தியாசங்களை பயிற்சிகள் வழியாக புரியவைக்கிறார்கள். இதுவரை 20 பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

‘‘5 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவி களுக்கு தொடுதல் பற்றிய விளக்க பயிற்சி அளிக்கிறோம். மாணவிகளின் பெற்றோருக்கும் ஆலோசனை தருகிறோம். குழந்தை களின் முன்னிலையில் ‘குற்றம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி நாங்கள் பய முறுத்துவதில்லை. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்களை பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். சிறுவயதில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் பற்றி தைரியமாக புகார் கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். எங்களின் கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக இருக்கிறது’’ என்கிறார், சரோஜ் குமாரி.

மேலும் செய்திகள்