தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

விழுப்புரம் அருகே தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2018-09-09 21:45 GMT

செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள சங்கீதமங்கலம் காலனியை சேர்ந்தவர் சத்தியநாராயணன்(வயது 35). இவருடைய மனைவி கிளிராமேரி. இவர்களுக்கு 1½ வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று சத்தியநாராயணன், தனது மனைவி கிளிராமேரி, குழந்தையோகேசுடன் நேமூரில் இருந்து கஞ்சனூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

வெங்காயகுப்பம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரை சத்தியநாராயணன் முந்திச்செல்ல முயன்றார். அப்போது டிராக்டரில் இருந்த வைக்கோல் உரசியதில், கிளிராமேரியின் மடியில் இருந்த குழந்தை யோகேஷ் தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை யோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான குழந்தை யோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்