மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு

திண்டுக்கல் அருகே சுற்றுலா பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-09-09 21:45 GMT

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் பாலம்ராஜக்காப்பட்டி அருகே உள்ள கோட்டூர் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 22). டிராக்டர் டிரைவர். இதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் ராஜசேகர்(17). இவர் பழனியில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு ரெட்டியார்சத்திரத்தில் இருந்து கோட்டூர் ஆவரம்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

திண்டுக்கல் அருகே கதிரையன்குளம் என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற சுற்றுலா பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் 2 பேருக்கும் தலையில் பலத்த அடிபட்டது. அதையொட்டி ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்தவுடன் அந்த பகுதியில் இரவு 9¼ மணியில் இருந்து 9¾ மணி வரை அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மாணவர் ராஜசேகரை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்