கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் செல்போன்கள் திருட்டு

நாகையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-09 21:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை ராமநாயக்க குளத்தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 26). இவர் பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7-ந்தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு கணேஷ்குமார் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உ ள்ளே சென்று பார்த்த போது ரூ.70 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கணேஷ்குமார் வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன், லலிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெளிப்பாளையம் சிவன் கோவில் தெற்கு வீதியை சேர்ந்த காளிதாஸ் (எ) தளபதி காளிதாஸ் (45), வெளிப்பாளையம் வடக்கு நல்லியான்தோட்டத்தை சேர்ந்த வீரணன் மகன் சசிகுமார் (38) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் தான் கணேஷ் குமாரின் செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து காளிதாஸ், சசிகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 24 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்