கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு

கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது

Update: 2018-09-09 23:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கான பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் துறைமுகம் கட்டும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு மிதவைக்கப்பல் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுகு முன்பு பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாலும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த மிதவைக்கப்பல் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய கப்பலை ரப்பர் மிதவை மூலமும், நாட்டுப்படகு மீனவர்கள் உதவியுடனும் மீட்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மிதவைக் கப்பல் நேற்று மீட்கப்பட்டு குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் சரி செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்