முதியவர் அடித்துக்கொலை 3-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

மாங்காட்டில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது 3-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-09 23:00 GMT
பூந்தமல்லி,

மாங்காட்டை அடுத்த பட்டூர், காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 70). இவர் இறந்து விட்டதாகவும், அவரது உடலை குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக அடக்கம் செய்யும் பணி நடந்து வருவதாகவும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சாகுல் அமீதின் தலையில் காயம் இருந்தது. இதையடுத்து அவரது மனைவியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். விசாரணையில் கணவர் கொலை செய்யப்பட்டதை அவரது மனைவி ஜபருனிசா ஒப்புக்கொண்டார்.

சாகுல் அமீதின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜபருனிசா (34), அவரது கள்ளக்காதலன் சீனிவாசன் என்ற உசேன் (43), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

ஜபருனிசா கொலை செய்யப்பட்ட சாகுல் அமீதின் 3-வது மனைவி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஜபருனிசாவிற்கும் அவரது உறவினர் சீனிவாசனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ ஜபருனிசா வந்துள்ளார். இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த சீனிவாசன் சாகுல் அமீதுடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்ததில் சாகுல் அமீது இறந்துள்ளார். இதையடுத்து தவறி விழுந்து இறந்து போனதாக உறவினர்களை நம்ப வைத்து இங்கு அடக்கம் செய்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் கார் மூலம் சாகுல் அமீது உடலை பூந்தண்டலத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்