661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் - திருச்செங்கோட்டில் கலெக்டர் ஆய்வு

மாவட்டம் முழுவதும் 661 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2018-09-09 23:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. திருச்செங்கோட்டில் நடந்த முகாமை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கு இணங்க, 1.1.2019-ந் தேதியை தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம்.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருந்ததையும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :-

வாக்காளர் பட்டியல சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமானது வருகிற 23-ந் தேதி, அக்டோபர் மாதம் 7 மற்றும் 14-ந் தேதிகளில் நடைபெறும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், தாசில்தார் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்