பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த புதுமாப்பிள்ளை சாவு

ஓமலூர் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-09 20:02 GMT
ஓமலூர்,

பழைய சூரமங்கலம் மஜித் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). இவர் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், நாச்சினம்பட்டி காலனியை சேர்ந்த ஜோசினி (23) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புதுமாப்பிள்ளையான மணிகண்டன், தான் வேலை பார்த்து வந்த ஓட்டலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மணிகண்டன் தனது மனைவியுடன் நாச்சினம்பட்டி காலனியில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். அன்று இரவு 10 மணியளவில் மணிகண்டன், அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 2 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்