தஞ்சை மாவட்டத்தில் 2,287 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 287 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

Update: 2018-09-09 21:45 GMT
தஞ்சாவூர்,


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பொது மக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் ஆகியோரிடம் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து, தஞ்சை தென் கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், மருங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், செங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வளம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் 2,287 மையங்களிலும் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 7, 14 ஆகிய தேதிகளிலும் நடைபெறு கிறது. 1-1--2001-ந்தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு இம்முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பம் செய்யலாம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடி மையங்களான 2,287 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை நேரில் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், தஞ்சை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து, தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார்கள் அருணகிரி, இளங்கோவன், மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்