மின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம்

போடி அருகே, மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் சரக்குவேன் கவிழ்ந்ததில் தம்பதி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-09 21:45 GMT
போடி, 


போடி ஜக்கமநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 70). இவருடைய மனைவி பொன்னுத்தாய் (63). இவர்கள் போடி கீரைகடை தெருவில் காய்கறி கடை வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு போடி நோக்கி சரக்கு வேனில் வந்துகொண்டிருந்தனர். சரக்கு வேனை புவனேஸ்வரன் (19) என்பவர் ஓட்டினார்.

போடி சோளப்பட்டிகளம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் சரக்கு வேன் மோதியது. மோதிய வேகத்தில் அருகே உள்ள ஓடை பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஈஸ்வரன், பொன்னுத்தாய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் புவனேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீஸ் சஸ்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார். சரக்கு வேன் மோதிய வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் போடி நகரம் இருளில் மூழ்கியது. உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 

மேலும் செய்திகள்