பள்ளியில் வகுப்பறை திறக்கப்படாததால் தரையில் அமர்ந்து மனுக்களை பெற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள்

கீழ்நாத்தூர் உயர்நிலை பள்ளியில் வகுப்பறை திறக்கப்படாததால் தரையில் அமர்ந்து மனுக்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றனர்.

Update: 2018-09-09 23:00 GMT
திருவண்ணாமலை,

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 1,250 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 2,372 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றனர். இந்த சிறப்பு முகாமை அந்தந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கீழ்நாத்தூர் உயர்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி உள்ளது. இதில் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டின் 176 மற்றும் 177 பாகத்திற்கான மக்களும், 39-வது வார்டு 110 பாகத்திற்கான மக்களும் மனு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டும். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியை வாக்குச்சாவடிக்கான வகுப்பறையை திறக்க சாவி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட வகுப்பறை திறக்காமலேயே இருந்தது.

இந்த வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம் எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்வையிட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு வாக்குச்சாவடி உள்ள வகுப்பறை திறக்காமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்த வகுப்பறைக்கு வெளியில் தரையில் அமர்ந்து வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக மனு அளிக்க வந்தவர்களிடம் மனுக்களை பெற்றனர். இதுகுறித்து தாசில்தார் மனோகரனிடம் அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு பேசி பள்ளிக்கு வரசெய்தனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரும் கீழ்நாத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம், முதன்மை கல்வி அலுவலர் விசாரித்தார். அப்போது பள்ளியில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் தான் சாவி கொடுக்கவில்லை என்று தலைமை ஆசிரியை கூறினார்.

வாக்குச்சாவடிக்காக ஒதுக்கப்பட்ட அறையில் பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது என்றும், மின்சார பெட்டி சரியில்லை என்றும் கூறினார். இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் அந்த வகுப்பறையை திறந்து பார்த்தார். பின்னர் அதில் சிறப்பு முகாம் நடத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியையிடம், மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் பள்ளியில் ஏதேனும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றால் மனுவாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து 11.30 மணியளவில் இருந்து அங்கு சிறப்பு முகாம் தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்