மண், நீர்வளத்தை கெடுத்தவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தான் - டாக்டர் ராமதாஸ்

வேலூர் மாவட்டத்தின் மண், நீர்வளத்தை கெடுத்தவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தான் என்று லாலாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Update: 2018-09-09 23:19 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் நடைபெற்றது. பா.ம.க. இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட செயலாளர் துளசிராமன், மாவட்ட துணை செயலாளர்கள் எல்.வி.மணி, மணிஎழிலன், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக்ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எல்.வி.ராமசாமி, தயாளன், பாலு, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் குப்புசாமி, கிளை தலைவர் மனோகரன், துணை தலைவர் மோகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வாலாஜா வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் பா.ம.க.வின் கோட்டையாக மாறியுள்ளது வேலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் மண் வளத்தையும், நீர் வளத்தையும் கெடுத்தவர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தான். இந்தியாவில் 50 மாவட்டங்கள் கருப்பு மாவட்டங்கள் என கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் மண் வளம் கெட்டுவிட்டது. பல போராட்டங்கள் நடத்தியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கல்வியில் 3-வது இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் இன்றைக்கு கடைசி மாவட்டமாக இருக்கிறது. இதற்கு காரணம் தி.மு.க., அ.தி.மு.க. தான்.

கல்வியை தனியார் கையில் கொடுத்து விட்டு, சாராயத்தை விற்கும் வேலையை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் எந்தவித வசதியும் இல்லை. அரசியல்வாதிகள் எவ்வித திட்டத்தையும் கொடுக்காமல் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள்.

என் வாக்கு விற்பனைக்கு இல்லை என்பதை எல்லோரும் பிரசாரமாக எடுத்துச்செல்ல வேண்டும். மனிதகுலத்தை உருவாக்கும் சக்தி பெண்களுக்கு உள்ளது, காக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் பெண்களிடம் உள்ளது. பெண்களிடத்தில் விலை மதிக்க முடியாத ஓட்டு எனும் ஆயுதமும் உள்ளது.

அதை ஒருமுறை உபயோகித்து டாக்டர் அன்புமணி ராமதாசை முதல் -அமைச்சராக்குங்கள். இலவச கல்வி, மது ஒழிப்பு, ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை ஒரே விதமான உயர்தர மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரக்கூடிய திட்டங்களை அன்புமணி நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய மந்திரி வேலு, மாநில துணை பொதுச்செயலாளர்கள் சரவணன், கே.எல்.இளவழகன், வன்னியர் சங்க மாநில செயலாளர் எம்.கே.முரளி, மாநில துணை தலைவர்கள் என்.டி.சண்முகம், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அ.ம.கிருஷ்ணன், கரிகாலன், வக்கீல் ஜானகிராமன், மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்